

சென்னை,
4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. இன்று முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக சட்டசபையில், கோவையில் மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் நடத்த திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல. போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கு தான் கொலைக்கு காரணம் என்பது தான் குற்றச்சாட்டு. இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விவாதம் தேவை என்றும் எண்ணூர் ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
அதிமுக எம்.எல்.ஏ. காமராஜ் பேசுகையில், “20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை. கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஒருவரை 25 பேர் அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாகும்?. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில், “கோவை மாணவர்கள் கொலை வழக்கில் காவல்துறை விளக்கம் ஏற்புடையதல்ல. கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வது வேதனை. பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் எளிதாக கிடைக்கிறது. கடந்த ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோ, இந்த ஆட்சியிலும் போதை பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களும் இன்றும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும்; அமுதன் மற்றும் தனுஷ் கொலை குறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேசுகையில், “கோவையில் கடந்த 10 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்றால் காவல்துறையில் களை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்து கூறியதாவது:-
மாணவர் கொலை வழக்கு போதைப் பொருள் புகார் தொடர்பானது இல்லை; உண்மை நிலவரத்திற்கு மாறாக வழக்கை திசை திருப்ப வேண்டாம். எதிர்க்கட்சிகள் கூறியது போல எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. கோவை மாணவர் கொலையில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்மையை மறைக்க வேண்டிய தேவை காவல்துறைக்கோ, அரசுக்கோ இல்லை. போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் கொலை என்பது தவறு. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:-
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள். நேர்மையான முறையில் விசாரணை நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் அரசு பங்கெடுக்கிறது. மாணவர்கள் கொலை தொடர்பாக உரிய விசாரணை நடக்கிறது. கோவை மாணவர் கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். கல்வி நிறுவனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.
மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை. மாணவர் தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும். தவெக அரசை பொறுத்தவரை நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; இனி இது போல எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து போதை பொருள் மன்னன் ஜாபர் சாதிக்குடன் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “ஜாபர் சாதிக் மீதான குற்றச்சாட்டு வந்த போது, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால் உங்கள் அமைச்சர் ஒருவர் மைதானத்தில் பவுடர் வைத்திருந்தார். அதை உலகமே பார்த்திருக்கிறது. அது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் கூறுகையில், ஸ்டேடியத்தில் நடந்ததற்கான விளக்கத்தை நான் அளித்துவிட்டேன். அதில் முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான். அப்போது ஸ்டேடியத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம்.
என் மீது கூறப்படும் புகார் நடைபெற்றது திமுக ஆட்சி காலத்தில் அப்படியானால் திமுக ஆட்சி காலத்தில் போதை பொருள் விற்றதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று கூறினார். இவ்வாறு தமிழக சட்டசபையில் தொடக்கத்திலேயே காரசார விவாதம் நடந்தது.