

திருவண்ணாமலை:
2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் அருணாச்சலேசுவரர் அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்ட அமித்ஷா, இன்று தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை புறப்பட்டார். மாலை 5 மணியளவில் அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வந்தடைந்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக ரமண மகரிஷி ஆசிரமம் வந்தடைந்தார்.
ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெற்ற பூஜையில் அமித்ஷா கலந்துகொண்டார். இதன்பின்ன மாலை 5.40 மணியளவில் அருணாச்சலேசுவரர் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் நடைபெற்ற அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.