கோவில் பூசாரியாக உள்ள 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி - உறுதி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

நீலகிரியில் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவில் பூசாரியாக உள்ள 7 வயது சிறுவனுக்கு தடையில்லா கல்வி - உறுதி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நீலகிரி மாவட்டத்தில் 7 வயது சிறுவன் கோவில் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சென்னை ஐகோர்ட்டில் சிவன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோயில், 1994 ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதுச் சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்கள் அவர்களுக்கான உணவை அவர்களே சமைத்துச் சாப்பிடுவது, கோயில் பசுக்களின் பாலைக் கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் அவர்களின் கல்வி தடைப்படுகிறது. இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், கோவில் மரபுப்படி சிறுவன் கோவிலை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், தமிழகத்தில் வீடுதோறும் கல்வி திட்டம் மூலம் தற்போது அந்த சிறுவன் 3-ம் வகுப்பு படிப்பதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இ.எம்.ஐ.எஸ். எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிறுவனுக்குத் தடையற்ற கல்வி கிடைக்க வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. அரசு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிறுவனுக்குத் தொடர்ந்து கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். சிறுவனின் உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிந்தால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com