

புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. மக்களவையில் கேள்வி நேரம் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இன்று மக்களவை கூடியபோது, நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, அவை உறுப்பினர்களை அவரவர் இருக்கைகளில் சென்று அமருமாறும், கேள்வி நேரத்தை நிறைவு செய்ய ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், “நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கோஷமிடுவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. இவ்வாறு கோஷமிட்டு, பதாகைகளை காட்டுவதால் அவையின் மாண்பு குறைந்துபோகிறது” என்றார்.
இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிடுவதும், அதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பதிலளித்து கோஷமிடுவதும் என அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியதால், தொடர்ந்து அவை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல், மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.