

கனிமொழி எம்.பி. மாலை அணிவிப்பு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு சார்பில் ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் மற்றும் அவரது இல்லத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு கூறும் வகையில் மாவட்ட செய்தித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த தலைமுறை
கப்பலோட்டிய தமிழன் 100-வது பிறந்தநாளை கருணாநிதி சிறப்பாக கொண்டாடினார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது உருவச்சிலையை திறந்து வைத்து வ.உ.சி.க்கு பெருமை சேர்த்தார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி. 150-வது பிறந்தநாளை தூத்துக்குடி மக்களே வியக்கக்கூடிய, பாராட்டக்கூடிய அளவிற்கு, யாரும் எதிர்பாராத அளவிற்கு 14 அறிவிப்புகள் வெளியிட்டு, அவருக்கு பெருமை சேர்த்து உள்ளார்.வ.உ.சி.யின் பெருமைகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த கடமையை உணர்ந்து மாணவர்களுக்காக அவரது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்படும். அவருடைய புத்தகங்கள் பாடநூல் மூலமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்படும்.வ.உ.சி. தன் வாழ்நாளை இந்திய சுதந்திரத்திற்காக மட்டுமல்லாமல், தமிழ் மொழிக்காக தமிழ் அடையாளங்களுக்காக சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வ.உ.சி சாலை
பின்னர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டுக்கு வ.உ.சி. சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து அந்த சாலை நேற்று வ.உ.சி. சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் பலகை திறப்பு விழா டபிள்யூ.ஜி.சி ரோட்டில் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.
முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை நேருஜி பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் இடம், கைப்பந்து, கூடைப்பந்து விளையாடும் இடம், விளையாட்டு சாதனங்கள் மற்றும் ரூ.1.54 லட்சம் மதிப்பீட்டில் நவீன நிழற்குடை ஆகியவற்றை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.