வணிகவரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வணிகவரித்துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வணிகவரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

வணிகவரித்துறையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வணிகவரித்துறையினருக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும். அதனடிப்படையில் 1981-ம் ஆண்டு முதல் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து ஐந்தாண்டுகள் ஆகியும் அதை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது!

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தடையாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டு விட்டது. வணிகவரித்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்று பேரவையில் கடந்த ஆண்டே அரசு உறுதியளித்தும் அது நிறைவேற்றப்படவில்லை!

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்தாண்டுகளாக பாமக குரல் கொடுத்து வருகிறது. வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆகியவற்றில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், வணிகவரித்துறையினருக்கு மட்டும் தாமதிக்கப்படுவது சமூக அநீதி!

வணிகவரித்துறையினருக்கு கடந்த 23 ஆண்டுகளாக இதே சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது இனியும் தொடரக்கூடாது. இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு வணிகவரித்துறையினருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!

வணிகவரித்துறையில் 120-க்கும் உதவி ஆணையர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக உரிய முறையில் நிரப்பி வணிகவரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com