காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை, தென்கலை பிரச்சினை

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.
Vadakalai Thenkalai issue in Kanchipuram Varadaraja Temple
Published on

காஞ்சிபுரம்,

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் வடகலை மற்றும் தென்கலை ஆகிய இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே வேதபாராயணம் மற்றும் ஸ்தோத்திர பாடல்கள் பாடுவதில் நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வருகிறது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் தற்போது வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கோஷ்டி பிரச்சினை நடைபெறக் கூடாது என்பதற்காக இரு பிரிவினருமே வேதபாராயணம் மற்றும் திவ்யபிரபந்தம் பாடக்கூடாது என கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெறும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக சுவாமி வரதராஜ பெருமாள் வீதி உலா வந்து கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மந்திர புஷ்பம் எனப்படும் பாடலை பாடி வழிபாடு செய்வது வழக்கம். அந்த வழிபாட்டின்போது தென்கலை பிரிவினர் இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இன்று நடைபெற்ற நாக வாகன உலாவின்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கிடையே மீண்டும் பிரச்சினை வெடித்தது. அப்போது போலீசார் அங்கே வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தினந்தோறும் இத்தகைய பிரச்சினைகள் நடந்து வருவதால், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நீதிமன்றம் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com