வடமதுரை மாணவி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

வடமதுரை மாணவி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
வடமதுரை மாணவி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 7-ம் வகுப்பு மாணவி, கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் விடுதலை செய்யப்பட்டார். இதனால் மாணவியின் கொலைக்கு நீதிகேட்டு, தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மாணவி கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில், அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜன் தலைமையில், மாவட்ட தலைவர் பரமசிவம், செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்ததற்கு முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் மாணவி கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும். மேலும் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல் மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ.25 லட்சமும், மாணவியின் தாயாருக்கு சத்துணவு பணியாளர் வேலையும் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com