வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

திருச்சி,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் வரை சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.

சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைத்த பின்னர் முதல் -அமைச்சர் ஸ்டாலின் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (வெள்ளிக்கிழமை) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com