

சென்னை,
தவெக ஆதரவு கட்சி கூட்டத்தில் நிச்சயம் மதிமுக கலந்துகொள்ளும் என வைகோ கூறியுள்ளார்.
வரும் 9-ம் தேதி தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில்,
இடதுசாரி தலைவர்களை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் சந்தித்தனர். அதனை தொடர்ந்து தவெக அமைச்சர்கள் சந்திப்பிற்கு பின் வைகோ செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எதிர்க்கட்சியிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் பாய்ந்தாலும், அவற்றை இடைமறித்து சிறப்பாகப் பதிலளிக்கும் ஆற்றலை தவெக அமைச்சர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு சாதித்து வருகிறார்கள்.
சட்டமன்ற நேரலையை மக்கள் பார்க்கும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. அது ஆளும் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவைப் பெருக்கி கொடுக்கிறது. தொலைக்காட்சியில் சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பப்படுவது, ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திற்கும் நல்லது. ஜனநாயகத்திற்கும் நல்லது.
தவெக ஆதரவு கட்சி இரண்டாம் கட்ட கூட்டம் 9ம் தேதி நடைபெறுகிறது, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதில் நாங்கள் பங்கு பெறுவோம். சட்டசபையில் முதல்-அமைச்சர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். தவெகவின் 110 நாட்கள் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
'ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்களின் குறிக்கோள்' என்று சொன்னது மட்டுமல்லாமல், அதில் வெற்றி பெற்று வருகிறார்கள்; ஒரு ஆட்சிக்கு இதைவிட மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றார்.