

சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வைகை கரையில், கீழடியில் நடைபெற்று வருகின்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றி வருகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வீற்று இருந்தது வரலாறு. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரையில் வைகை ஆற்றில் சிறுவர்கள் பழங்கால ரோமாபுரி நாணயங்களை சேகரித்து பழம், பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்த தகவல்களை பல எழுத்தாளர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
கீழடி ஆய்வு
அதன் தொடர்ச்சியாகத்தான் கீழடி ஆய்வு நடைபெற்றது. அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள், அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, சங்க காலத்தை சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதற்காக தமிழகம் போராட வேண்டியதிருக்கின்றது. உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை.
கீழடி ஆய்வுகள் குறித்து கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதியன்று அப்போது, மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரியாக இருந்த மகேஷ் சர்மாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். பள்ளி பாடங்களில் இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாக கற்பித்து வருகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாறை, சேர, சோழ, பாண்டியர்களை புறக்கணித்து வருகிறார்கள். இந்தநிலை இனியும் தொடரக்கூடாது.
அதிகாரிகளுக்கு பாராட்டு
காவிரி, வைகை, தாமிரபரணி நாகரிகங்களை முதன்மைப்படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் வரலாற்று பாடத்திட்டங்களை மாற்றி எழுதவேண்டும். தொல்லியல்துறைக்கு உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பொறுப்பு ஏற்ற பின்னர் மேற்கொண்டு வருகிற பணிகளையும், கீழடி ஆய்வுகளுக்கு தூண்டுகோலாக இயங்கி வருகிற வெங்கடேசனையும் பாராட்டுகிறேன்.
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்காக மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரி பூம்பட்டினம் உள்ளிட்ட விரிவான ஆய்வுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.