வள்ளியூர் பெரியகுளம் ஆக்கிரமிப்பு அகற்றம்

வள்ளியூர் பெரியகுளம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
வள்ளியூர் பெரியகுளம் ஆக்கிரமிப்பு அகற்றம்
Published on

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் பெரியகுளம் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இந்த குளத்தின் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நீர்பிடிப்பு பகுதி குறைந்து வந்தது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலைமுருகன், சேதுராமலிங்கம், வேம்பு சுப்பையா ஆகியோர் நெல்லையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்தனர். இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விசாரித்து, குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நாங்குநேரி, ராதாபுரம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்ட ராஜன், வள்ளியூர் உதவி பொறியாளர் ரமேஷ்குமார், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், வள்ளியூர் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, பணகுடி இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் வள்ளியூர் பெரிய குளத்திற்கு வந்தனர்.

பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வள்ளியூர் பெரியகுளத்தின் நிலஅளவு வரைபடத்தின்படி அளந்து எல்கைகளில் நிலஅளவை கல்பதித்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்டவர்கள் 33 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்து நிலங்களை மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com