சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்

அதிராம்பட்டினம் அருகே சாலையோரத்தில் வேனை நிறுத்த முயன்ற போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 20 பேர் படுகாயம்
Published on

தஞ்சாவூர்:

மதுரை மாவட்டம், வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மகள் திருமணம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள திருப்பாலக்குடி கிராமத்தில் இன்று நடைபெற உள்ளது.அதனால் அவர் குடும்பத்துடன் மொத்தம் 25 பேர் ஒரு வேனில் இரவு ஒரு மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்பாலக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இன்று காலை அதிராம்பட்டினம் அருகில் வந்து கொண்டிருந்த போது திருப்பாலக்குடி செல்வதற்கான வழியை கேட்பதற்காக  அங்குள்ள கோவில் அருகே வேனை சாலை ஓரமாக நிறுத்த டிரைவர் முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் ,10 பெண்கள் என 20 பேர் பலத்த காயமடைந்தனர்.5 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொட்ர்பாக வழக்குப்பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com