சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த எம்.பி வசந்தகுமார் உடல், தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
Published on

சென்னை,

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாச கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 6.56 மணியளவில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி , தெலங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு வசந்தகுமார் எம்.பி உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தி.நகர் நடேசன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வசந்த் &கோ நிறுவன ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

காலை 10.30 மணி வரை வசந்தகுமாரின் உடல் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்படுகிறது. பின்னர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மதியம் 2 மணி வரை உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, சொந்த ஊரான கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் கொண்டு செல்லப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com