பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக வி.சி.க. வழக்கு

கோப்புப்படம்
கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற கோரும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள எங்களது கட்சியின் கொடி கம்பத்தை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.