வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் - திருமாவளவன்


வி.சி.க.வும் அதிக தொகுதிகளை கோரும் - திருமாவளவன்
x

கோப்புப்படம்

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், "ஒவ்வொரு கட்சியும் அப்படித்தானே சிந்திக்க முடியும். குறைவான தொகுதிகளை கேட்போம் என்று சொல்ல வாய்ப்பில்லை. நாங்களும் அப்படித்தான் சொல்றோம், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளை கேட்டு பெற முயற்சிப்பது வழக்கமான ஒன்றுதான். இது வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால் பேச்சுவார்த்தையின் போது இருக்கிற சூழல்களை மனம் விட்டு பேசி அதன் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். அவர்களுடைய தேவைகளை கூட்டணி தலைவர் என்கிற முறையில் அவர்கள உருவாக்கக்கூடிய குழுவிடம்தான் பேசுவோம். அவர்களும் அதே மாதிரி எல்லா கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. எல்லாருக்கும் இடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்களும் கூடுதலான இடங்களில் போட்டியிட்டு தனிப்பட்ட முறையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டிய விருப்பத்தில் இருப்பார்கள். அனைத்தையும் கருத்தில் கொண்டு நாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை 100 விழுக்காடு நிறைவேற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு. ஆகவே நானும் சொல்லுகிறேன், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

நாங்கள் 'கூடுதலாக மதுக்கடைகளை மூட வேண்டும், படிப்படியாக மூட வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக அதிலே ஒரு நிலைப்பாட்டை திமுக எடுக்க வேண்டும்' என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறோம்" என்று கூறினார்.

பாஜக - அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக, வலுவாக உள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை. அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக கருத வேண்டியதில்லை. யதார்த்தமான உண்மை அதுதான். அமித்ஷா ஒரு முறைக்கு இருமுறை வந்தார். கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்று சொன்னார்.

பாஜக எதிர்பார்த்ததற்கு மாறாக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளே அந்த கூட்டணியில் இணைவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்க இல்லை. ஆகவே அதிமுக - பாஜக கட்சிகளைத் தவிர என்னென்ன கட்சிகள் அந்த கூட்டணியில் உள்ளன என்பதை இன்னும் நம்மால் முடிவுக்கு வர முடியவில்லை.

இந்த சூழலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என சொல்லுவது ஒரு வகையான பில்டப் என்று சொல்ல வேண்டி உள்ளது. இந்த நொடி வரை தி.மு.க. கூட்டணி தான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது" என்று திருமாவளவன் கூறினார்.

1 More update

Next Story