

தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தன.
இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 52-வது நாளாக தொடருகிறது. அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஆலைக்கு வரும் வாகனங்களை போராட்டக்காரர்கள் தடுப்பதாகவும், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.