

சென்னை,
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்' (எம்.ஆர்.டி.எஸ்.) என்று அழைக்கப்படும் பறக்கும் ரெயில் சேவை கடந்த 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரையிலிருந்து சேப்பாக்கம் வரை நடந்து வந்தது. இது 2007-ம் ஆண்டில் இருந்து வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பறக்கும் ரெயிலில் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் மாற்றுவதற்கு ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. வரும் மார்ச் 10 -ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
பயணிகளுக்கு நேர சேமிப்பும், சாலை நெரிசல் குறைப்பும் கிடைக்கும் என ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னைவாசிகளின் 15 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தற்போது தேதி குறித்துள்ளது தெற்கு ரெயில்வே. சென்னை நகர மக்களுக்கு முக்கியமான ரயில் போக்குவரத்து வசதியாக வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
சென்னை நகரின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, நகர்ப்புற போக்குவரத்து மேம்பாட்டில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.