வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.61.73 லட்சம் மோசடி

பதிவு கட்டணம், இன்சூரன்ஸ், விசா என கூறி பல்வேறு தவணைகளில் பணம் பெற்றுள்ளனர்.
மோசடி
கோப்புப்படம்
Published on

சிவகங்கை,

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.61.73 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெர்மன் நாட்டில் வேலை

திருப்பத்தூரை அடுத்த பட்டமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேஷ் (28 வயது). இவருடைய செல்போனில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டு பேசிய 2 பேர் ஜெர்மன் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய கணேஷ் அவர்கள் கூறியபடி பதிவு கட்டணம், இன்சூரன்ஸ், விசா, மருத்துவ பரிசோதனை, பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு தவணைகளில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரத்து 461 செலுத்தியதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

அதன் பின்னர் அவர்கள் கணேசை ஜெர்மன் நாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கணேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com