தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்? வெளியான முக்கிய தகவல்

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதி ஓய்வுபெறும் நிலையில் தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி. நியமனம் செய்யப்பட உள்ளார்.
சென்னை,
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. தமிழக போலீஸ்துறையில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். என்ஜினீயரான இவர் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இவர், சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகள் பணியாற்றியவர். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கட்ராமன். 8.5.1968ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தார். பி.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ. (பொது நிர்வாகம்) முடித்துள்ளார். பின்னர் யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக கேடரில் 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளநிலையில், அதற்கு முன்னதாக அதாவது நாளை (29ம் தேதி) புதிய டி.ஜி.பி. பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






