சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கூறியது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 9 போலீஸ்காரர்களும் இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்களுக்கு என்னென்ன தண்டனை என்பது அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com