

சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தன்னிடம் ஒட்டுமொத்தமாக, அசையும் சொத்துகளாக ரூ.12.92 கோடியும், அவரது மனைவி யிடம் ரூ.13.25 கோடியும், மகளிடம் ரூ.2.56 லட்சமும் உள்ளன. இதுதவிர, ரூ.7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் உள்ளன என்று கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், “ தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கும் நடைமுறை துவங்கும்; சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன 150 நாட்களுக்குள் சரிபார்ப்பு பணிகளை முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டது. இதையடுத்து, வருமானவரித் துறை விசாரிக்கக் கோரிய வழக்கை ஜூன் மாதத்துக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.