

சென்னை,
தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதுவரை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இந்த தனி கிடங்குகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களின் முதல்கட்ட சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், வேலூர், காஞ்சீபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த முதல்கட்டப் பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.