துணைவேந்தர் நியமன திருத்த சட்டத்துக்கு தடை: ஐகோர்ட்டு தீர்ப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - முத்தரசன்

ஐகோர்ட்டு அவசர, அவசரமாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது அடுக்கடுக்கான வினாக்களை எழுப்புகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு கவர்னர் பொறுப்பில் நியமனம் பெற்ற ஆரம்ப நாளிலிருந்து ஆர்.என்.ரவி மலிவான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, ஒப்புதலுக்கு அனுப்பிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத நெருக்கடியை ஏற்படுத்தி வந்த கவர்னரின் பொறுப்பற்ற செயலை தடுக்க வேண்டும் என பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் முறையிடப்பட்டது. இதன் மீது எந்த விளைவும் ஏற்படாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 8-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.

கவர்னரின் உள்நோக்கம் கொண்ட எண்ணத்தை உணர்ந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் கிடப்பில் போட்டு, முடக்கி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனச் சட்டப்படி, துணை வேந்தர்கள் தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பா.ஜ.க. வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, ஐகோர்ட்டின் விடுமுறை கால அமர்வு - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட முறை, அரசு தரப்பு கேட்டுக் கொண்ட நியாயமான கால அவகாசம் தர மறுத்த விதம், அவசர, அவசரமாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்த வேகம் அனைத்தும் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தி, அடுக்கடுக்கான வினாக்களை எழுப்புகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி கடந்த 13-ம் தேதி 14 வினாக்களை எழுப்பி, அவைகளுக்கு விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டுக்கு எழுதியுள்ளார். இந்த நிலையில் சென்னை கோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கிய திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருப்பது, குழப்பங்களை ஏற்படுத்த வலிந்து மேற்கொள்ளப்பட்ட செயலாகும். நீதி பரிபாலன வரலாற்றில், சென்னை ஐகோர்ட்டின் இடைக்காலத் தடை தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com