மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.
இதற்காக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரைக்குளம் உள்பட பிரகாரங்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, நாளை மதியம் 12 மணியளவில் மீண்டும் டெல்லி செல்கிறார். இதற்கிடையே தென்காசி, நெல்லை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று இரவு மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.






