

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இது தான் முதல் முறையாகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர்; திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து வாக்களித்துள்ளனர் என்பதையுமே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஜனநாயகத்தை மதிப்பவர்கள்; அமைதிப்புரட்சி செய்பவர்கள். இப்போதும் அதைத் தான் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்னொருபுறம் சட்டம் & ஒழுங்கை பாதுகாத்தல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலைவாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட ஓர் அரசின் அடிப்படைக் கடமைகள் எதையுமே திமுக அரசு செய்யவில்லை. அதனால், கொந்தளித்துப் போன மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக காத்திருந்தனர். மக்கள் தங்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தாமல், தெளிந்த நீரோடையாக இருந்தாலும், ஆழ்கடலின் பிரளயம் போன்று அவர்களின் மனதுக்குள் திமுகவை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற கோபம் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த என்னைப் போன்றவர்களால் இந்த கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ஆட்சியாளர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; அதனால் தங்களைத் திருத்திக் கொள்ளவும் இல்லை. எனவே தான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நேற்று நடந்த தேர்தலில் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தி விட்டனர். அதன் விளைவு தான் வரலாறு காணாத வகையில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாகும்.
இந்த வாக்குகள் ஆட்சி மாற்றத்திற்கான வாக்குகள் தான் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தீர்ப்புக்காகத் தான் தமிழ்நாட்டு மக்கள் காத்திருந்தார்கள். இந்தத் தீர்ப்பு தான் தமிழக மக்களுக்கு நரக ஆட்சியிலிருந்து விடுதலை அளிக்கப் போகிறது. இனி வரும் காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், அனைவருக்கும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தத் தீர்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வயலில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தாலும் அவற்றை அறுவடை செய்து வராவிட்டால் எந்தப் பயனும் இல்லை. அதேபோல் தான் தேர்தல் களமும். மக்கள் மனதில் கனன்ற கோபத்தை ஆட்சியாளர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற்றியது தான் இந்தத் தேர்தலின் வெற்றி ஆகும். அதற்காக அதிமுக தலைமையிலான கூட்டணியில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து தீவிரமாக பரப்புரை செய்தனர்; அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்கள். இதற்காக அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்தத் தேர்தலில் காட்டிய வேகமும், விவேகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லா தொகுதிகளிலும் பலமுறை வீடு வீடாக சென்று கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக வாக்குகளைச் சேகரித்தனர். பல்வேறு தரப்பினராலும் ஏற்படுத்தப்பட்ட தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் தகர்த்தெறிந்து பா.ம.க மற்றும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது சிறப்பு நன்றிகளையும், பாராட்டுகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.