திமுக - அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார் - திருமாவளவன்

தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக - அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார் - திருமாவளவன்
Published on

சென்னை,

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழக சட்டமன்றதேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது. பிரதான கட்சிகளான தி.மு.க. அ.தி.மு.க. தங்களது தலைமையில் கூட்டணி அமைத்தும், த.வெ.க.. நாம் தமிழர் கட்சிகள் தனித்தும் களம் கண்டன.

இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியது. வருகிற 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதையொட்டி ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பாலானவை தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு சில கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும் என்றும், ஒரே ஒரு கருத்துக்கணிப்பு த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த கருத்துக்கணிப்பு முடிவு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதற்கான விடை நாளை மறுநாள் தெரிந்துவிடும், இந்தநிலையில், விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

விசிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை; தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கட்சியினர் மீது புகார் வந்துள்ளது. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைக்காத விசிகவினர் குறித்து தகவல் திரட்டப்படுகிறது.

எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணிதான் பெரும் வெற்றி பெறும். திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார்.ஆனால் ஆட்சியை கைப்பற்றும் தனித்த சக்தியாக வலிமை பெற இயலாது.திமுகவை அகற்றிவிட்டு பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜய்க்கு கவலையில்லை. பாஜகவை கொள்கை எதிரி என்பதை தவிர விஜய் வேறு எதுவும் சொல்வதில்லை என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com