விஜய் பிரதமரை சந்தித்து கிடப்பில் உள்ள நிதியை கேட்டு பெற வேண்டும் - மு.வீரபாண்டியன்

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பேரங்கள் தெரியாது, கோரிக்கைகள் தான் தெரியும் என மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
விஜய் பிரதமரை சந்தித்து கிடப்பில் உள்ள நிதியை கேட்டு பெற வேண்டும் - மு.வீரபாண்டியன்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.விரபாண்டியன் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழக மக்கள் எதிர்பார்ப்பின் படி, முதல்-அமைச்சர் விஜய், நல்லாட்சி தர வேண்டும். இந்தியாவிலேயே, நலத்திட்டங்களில் முதல் மாநிலம் தமிழகம். அந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும். அரசின் பார்வையில் இருந்து ஒதுங்கியுள்ள, லட்சக்கணக்கானோர் மீது கவனம் செலுத்தி புதிய நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

சிலர் சொல்வது போல, 'கம்யூனிஸ்ட்கள் ஆளும் அரசுக்கு குடைச்சல் தருவார்கள், நிம்மதியாக விட மாட்டார்கள், நம்பக்கூடாது' என்பதை எல்லாம் நிராகரிக்கிறோம். கொசு மருந்து அடிக்கும் தொழிலாளர், டாஸ்மாக் தொழிலாளர், அங்கன்வாடி பணியாளர், பழங்குடி மக்கள் கோரிக்கைகள் கிடப்பில் உள்ளது. அவற்றை முன்னெடுப்பதில் எங்கள் கவனம் இருக்கும்.

குதிரை பேரமோ, ஆடு பேரமோ, எந்த பேரங்களிலும் இதுவரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈடுபட்டதே இல்லை. எங்களுக்கு பேரங்கள் தெரியாது, கோரிக்கைகள் தான் தெரியும். முதல்-அமைச்சர் விஜய், பிரதமரை சந்தித்து, கிடப்பில் உள்ள நிதியை கேட்டு பெற வேண்டும். மத்திய அரசும் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.

வன்கொடுமை சட்டம் குறித்து, தமிழக அரசு சிந்திக்க வேண்டும். போதை பழக்கம் பரவலாக பரவி இருக்கிறது. கல்வி வாயிலாகவே, மனித மனங்கள் மாற்றப்படும். எனவே, போதை தடுப்புக்கான விழிப்புணர்வை, கல்வி இயக்கத்தின் மூலம், தமிழக அரசு துவங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com