காஞ்சீபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறார் விஜய்: 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - நுழைவுச் சீட்டு கட்டாயம்


காஞ்சீபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறார் விஜய்: 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி - நுழைவுச் சீட்டு கட்டாயம்
x

கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

காஞ்சீபுரம்,

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்க இருக்கிறார். அதன்படி சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்தார். ஆனால் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை 11 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு விஜய் தலைமை தாங்குகிறார். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க நுழைவுச் சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும், நுழைவுச் சீட்டு இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் த.வெ.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

விஜய்யை பார்ப்பதற்காக கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க தகரத்தால் ஆன தடுப்பு வேலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. 1 கிலோ மீட்டர் தூரம் யாரும் வராத வகையில் தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

1 More update

Next Story