மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில், காங்கிரசைதான் எதிர்க்க வேண்டும் - சீமான்

கோப்புப்படம்
மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய் நடத்திய 2-வது மாநில மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெற்றிருந்தது. 60-வது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 2 கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கிறது. அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறுமா? விஜய்யின் பின்னால் திரளும் ரசிகர்கள் அவருக்கு நண்பா, நண்பிகளாக இருக்கலாம். எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தான் நான் போராடுகிறேன்.
ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதில் விஜய் உறுதியாக நிற்க வேண்டும். மன்னர் ஆட்சி என சொல்லும் விஜய் முதலில், காங்கிரசைதான் எதிர்த்து பேச வேண்டும். ஏன் பேசவில்லை. 'ஒரு குடும்பத்தில் பிறந்த காரணத்தால் பதவி' என்றால் முதலில் காங்கிரசை தான் ஒழிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே. அப்போதுதான் ஒழுங்கு இருக்கும். இது போன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.






