ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை


ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x

நாளை காலை 11.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘ஜனநாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. ஐகோர்ட்டு உத்தரவை நிறுத்திவைத்து ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 15ம் தேதி (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை நாடுமாறு உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்புக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்பு முன் நாளை காலை 11.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

1 More update

Next Story