விஜய்யின் பேச்சு கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்.. வாக்காக மாறாது - நடிகர் எஸ்.வி.சேகர்

2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளதாக எஸ்.வி.சேகர் கூறினார்.
சென்னை,
எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கடராமன் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை அரசு வைத்துள்ளது. இதையடுத்து எஸ்.வி.சேகர், தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், பேசியதாவது;
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் நிற்பது எனது வாழ்நாள் கடமை. 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன். குறிப்பிட்ட சமூகத்தினருக்கு திமுக எதிரானது என்று பேசப்படுவது அரசியலுக்காக சொல்லப்படுவது. எல்லோருக்குமான முதல்வராகவே நம் முதல்வர் இருக்கிறார்.
ஜி.எஸ்.டி.யை குறைத்ததால் மக்களுக்கு நன்மை என்கிறார்கள். முதலில் அந்த ஜி.எஸ்.டி.-யை போட்டது யார்? அப்போதே போடாமல் இருந்திருந்தால் பல லட்சங்கள் சேமித்திருப்பார்கள் மக்கள். இனி ஜி.எஸ்.டி குறைத்தாலும் விலைகளெல்லாம் குறையாது.
கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக கோட்டைக்கு வந்தவர் இல்லை எம்.ஜி.ஆர். திமுக-வின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, பின் சிறு பிரச்னையால் தனிக்கட்சி ஆரம்பித்தவர். சினிமாவில் டூயட் பாடிவிட்டு, நேரடியாக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால், விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மனப்பாடம் செய்து பேசுவது, ’அங்கிள்’ என்றெல்லாம் பேசுவது கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்... வாக்காக மாறாது”
இவ்வாறு அவர் பேசினார்.






