மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைப்பு; தவெக அரசு நடவடிக்கை

வங்கி கணக்குகளில் தலா ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைப்பு; தவெக அரசு நடவடிக்கை
Published on

சென்னை,

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குப்பின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதன்படி, 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனாளிகளாக கண்டறியப்பட்டு மாதந்தோறும் 15ம் தேதி அவர்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில் வழக்கம்போல் பயனாளர்களுக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 கோடியே 31 லட்சம் பெண் பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் நேற்று கூறியிருந்த நிலையில் மே மாதத்திற்கான உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1,000 உதவித்தொகை மாணவ-மாணவியரின் வங்கி கணக்கில் தவெக அரசால் நேற்று வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com