

திருநெல்வேலி,
விக்கிரமசிங்கபுரத்தில் 17 வயது சிறுவன் மறுவாழ்வு மையத்தில் உயிரிழப்பு. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் சாந்த பிரபு. இவருக்கு இரண்டு மகன்கள்; மூத்த மகன் ரத்தினசாமி (17). கடந்த சில நாட்களாக பெற்றோரிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டு கொண்டே இருந்துள்ளார். இதனால் அந்தச் சிறுவன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக விக்கிரமசிங்கபுரத்தில் இயங்கி வரும் மறுவாழ்வு மையத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி அவரது தந்தை சேர்த்துள்ளார். நேற்று மாலை சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, மறுவாழ்வு மையத்தினர் ரத்தினசாமியை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்தவுடன் சிறுவனின் தந்தை சாந்த பிரபு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். தனது மகனின் உடலை பார்த்தபோது, அவரது இரண்டு கைகளிலும் கயிறு கொண்டு கட்டப்பட்ட தழும்புகளும் உடலில் ரத்த காயங்களும் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தந்தை, மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மறுவாழ்வு மைய ஊழியர்கள் மீது சித்திரவதை மற்றும் கொலை குற்றச்சாட்டை சுமத்தி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.