மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்- டிடிவி தினகரன் கண்டனம்

அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல்- டிடிவி தினகரன் கண்டனம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

காளையார்கோவில் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளான ஏனாவரம், புதுப்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் படி அங்கு சென்ற வி.ஏ.ஓ சேகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடி தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ படுகொலை, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி வி.ஏ.ஒ மீது கொலைவெறித் தாக்குதல் ஆகிய சம்பவங்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ மீது தாக்குதல் என தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவங்களின் மூலம், மணல் திருட்டை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகிறது.

சிவகங்கை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்தப்படும் சம்பவம், நேர்மையான அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மணல் திருட்டு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, மணல் அள்ளுவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதோடு, அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com