

உலக தண்ணீர் தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மருதக்குடியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.
கிராமசபை கூட்டம்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தஞ்சையை அடுத்த மருதக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்று உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம், நிதி செலவினங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
விரைந்து தீர்வு காண உத்தரவு
மேலும் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டசத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திடடங்கள்குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சங்கர், வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, மாவட்ட கவுன்சிலர் உதயன், ஒன்றிய கவுன்சிலர் ராஜகோபால், ஊராட்சி மன்ற தலைவர் அம்மாசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன், தாசில்தார் பெர்ஷியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.