

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் 1920-ம் ஆண்டு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு பாதை இருந்தது. இந்த கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற ஜாதி மோதல் காரணமாக, கிராமம் முழுவதும் இந்து மக்களாக இருந்தவர்களில், ஒரு தரப்பினர் பிரிந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அந்த பகுதியில் ஒரு கிறிஸ்தவசபை கட்டினர்.
அதனைத் தொடர்ந்து எதிர்தரப்பினரால் கிறிஸ்தவசபை அருகே சிறிதாக கட்டப்பட்ட சுவர் இருந்தது. நாளடைவில் அதை தீண்டாமை கல் சுவராக உயரமாக கட்டினர். அரசு நத்தம் புறம்போக்கில் கட்டப்பட்ட அந்த தீண்டாமை சுவரை அகற்றக்கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தீண்டாமை சுவரை அகற்றக்கோரி இதுவரை அந்த பகுதி மக்கள் கருப்புகொடி கட்டி போராட்டம், கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என எதையுமே ஆதிதிராவிடர் பகுதி மக்கள் கொண்டாடவில்லை. சுடுகாட்டில் குடியேறும் போராட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம், தூத்துக்குடி மாவட்ட கலெகடர் அலுவலகத்தில் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு இதுவரை எதற்கும் செவி சாய்க்கவில்லை.
ஓட்டுக்கு மட்டும் எங்களை தேடி வரும் அரசியல்வாதிகள் எங்களின் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை. ஓட்டுக்கு மட்டும் தான் நாங்கள் தேவையா? மக்கள் பிரச்சினையை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை எனவும், நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவதற்கு, நாங்கள் இந்துவா? கிறிஸ்தவரா? என வீட்டுக்கு வந்து போட்டோ பாக்க வராங்க, அப்படி இருக்கும் போது அரசு நத்தம் புறம்போக்கு இடத்தை எவ்வாறு பட்டா போட்டு கொடுக்கலாம்.
எனவே பாதையை மறித்து கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரியும், பட்டாவை ரத்து செய்யக்கோரியும் தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவற்றில் சுதந்திர இந்தியாவின் அவமான சின்னமாக உள்ள சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவரை அகற்றக்கோரி 2026 தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் என சுவர் ஒட்டிகள் (வால் போஸ்டர்கள்) ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.