

செஞ்சி
செஞ்சி அருகே உள்ள சிறுணாம்பூண்டி கிராம மக்கள் நேற்று செஞ்சி-விழுப்புரம் சாலையில் உள்ள அப்பம்பட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறுணாம்பூண்டி ஊராட்சி செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் இடமாற்ற உத்தரவை திரும்பபெறக்கோரியும் போராட்டம் நடைபெற்றது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்ரமணியம் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதன் காரணமாக செஞ்சி-விழுப்புரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.