தூத்துக்குடியில் நாளை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

வடசென்னை அனல்மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
தூத்துக்குடியில் நாளை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை போர்க்கால பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின்போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம், கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பயிற்சிகள் கண்காணிப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை மற்றும் மருத்துவக்குழுக்கள் இந்த மாதிரிப் பயிற்சியில் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நாளை (சனிக்கிழமை) போர்க்கால பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, தூத்துக்குடி வ.ஊ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது. இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com