நீர்வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு

வினாடிக்கு 300 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. ஐந்தருவி, மெயின் அருவி பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
நீர்வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு
Published on

ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும். அப்போது அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 300 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் கரைபுரண்டு ஓடிய ஒகேனக்கல் காவிரி ஆறு தற்போது பாறைகளாக காட்சியளிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவி, மெயின் அருவி பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது.

நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா. மேலும் கோடை விடுமுறை சுற்றுலாவை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள், உணவு சமைப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com