நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
தருமபுரி,
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேற்று மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 30 ஆயிரத்து 850 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் வினாடிக்கு 23 ஆயிரத்து 850 கனஅடியாக குறைந்தது. நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதுதவிர கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் மேல்மட்ட மதகுகள் வழியாக திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக 120 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






