பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

பவானிசாகர்,

நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணைக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும். கூடலூர் மலைப்பகுதி வழியாக வரும் மாயாறும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த அணை தண்ணீரால் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதேசமயம் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென குறைந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 589 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com