

சேலம்,
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரளம் மாநிலத்தில் வயநாடு, கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி (சனிக்கிழமை) கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் கரைபுரண்டு ஓடி, நேற்று அதிகாலை 5 மணிக்கு தமிழக எல்லையான பிலிகுண்டுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இதனையடுத்து கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர். பிலிகுண்டுலு ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணை நோக்கி வந்தது. நேற்று மதியம் பாலாறு வந்தடைந்த தண்ணீர் கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குளி ஆகிய பகுதிகளைக் கடந்து நேற்று இரவு 8 மணி அளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. அப்போது வினாடிக்கு 4 ஆயிரத்து 923 கனஅடி தண்ணீர் மேட்டூர் வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று இரவு நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 73.18 அடியாக இருந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி, வினாடிக்கு 4,923 கன அடியில் இருந்து 11,998 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 35.244 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.