கோப்பு படம்
கோப்பு படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,493 கனஅடியாக அதிகரிப்பு

கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
Published on

திருச்சி, 

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சிறப்பாக பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் விளைவாக இந்தாண்டில் மேட்டூர் அணை ஐந்தாவது முறையாக நிரம்பியது.

மழை நிலவரத்தைப் பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாசனத்துக்காக அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இன்று காலை அளவுப்படி, அணையின் நீர்மட்டம் 118.66 அடி என பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 9,828 கனஅடி வந்த நிலையில், இன்று அது 16,493 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15,000 கனஅடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களுக்கு தலா 850 கனஅடி தண்ணீர் விடப்படுகிறது. வருகை நீரின் அளவு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், அணையில் 91.35 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com