மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரிப்பு
x

மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களுக்கு பிறகு நேற்று 120 அடிக்கு கீழ் குறைந்திருந்தது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன தேவைக்காக கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனிடையே அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது.

கடந்த மாதம் 29-ந் தேதி மாலையில் இந்த ஆண்டில் முதன்முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அணை நிரம்பிய நிலையில் அணைக்கு நீர்வரத்தானது மேலும் அதிகரித்தது. இதன்காரணமாக அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தானது கடந்த 2 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 615 கனஅடியாக குறைந்தது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தேவை வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையை ஒட்டி நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 300 கனஅடி வீதமும், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக குறைந்தது. அதாவது கடந்த 3 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழ் குறைந்திருந்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,615 கன அடியிலிருந்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 119.60 அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து மொத்தம் 24,000 கன அடி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

1 More update

Next Story