

ஈரோடு,
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 3,023 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையில் 30.3 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.