மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் சரிவு

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
 மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் சரிவு
Published on

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. ேமலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் பெய்த பருவமழையால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து 5 மாவட்ட விவசாய பாசனத்துக்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20-ந் தேதி முதல் பாசனத்துக்கான நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீர் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது மழை பெய்தாலும் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்தேக்க பகுதியில் அதிக அளவு தண்ணீர் ஆவியாகி வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. போடி கொட்டக்குடி ஆறு, வருசநாடு, மூலவைகை ஆறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.71 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. அணையில் 590 மி.கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 110.30 அடியாக உள்ளது. 108 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 94.13 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. மழை எங்கும இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com