தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 9,958 கன அடியாக சரிவு

கர்நாடகாவில் அணைகள் நிரம்புகின்றன. இதனால், உபரி நீரை திறந்து விடுவதுதான் நல்லது என்று முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறினார்.

தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 9,958 கன அடியாக சரிவு
Published on

ஒகேனக்கல்

தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 25,000 கன அடியில் இருந்து 9,958 கன அடியாக சரிவடைந்துள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. எனினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கூட்டம்

சமீபத்தில் இதுதொடர்பாக, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து ஜூலை 29-ந்தேதி முதல் தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது.

ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறியது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்தது.

ஆணையம் உத்தரவு

ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதிப்படுத்தியது. இதன்படி, தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மொத்தம் 84 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 81.95 அடியாக உள்ளது. கபினி அணை முழுக்கொள்ளளவை எட்டுவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

உபரி நீர் திறப்பு

இந்த சூழலில், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 9,958 கன அடியாக சரிந்துள்ளது.

இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகாவில் அணைகள் நிரம்புகின்றன. இதனால், உபரி நீரை திறந்து விடுவதுதான் நல்லது. இயற்கை யாருக்கும் சொந்தமல்ல என்று கூறினார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் முதல்-மந்திரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com