ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்: கே.எஸ்.அழகிரி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருவாரூர்,
திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும். அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது தான். இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகளும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளனர். எங்களை பொறுத்தவரை தி.மு.க. எங்களுக்கு சிறந்த தோழமைக்கட்சி. நாங்கள் அவர்களிடம் பேரம் பேச தேவையில்லை. சிறந்த ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க. விளிம்பு நிலைக்கு சென்று விட்டது. தமிழகத்தின் உரிமையை பற்றி அவர்களால் பேச முடியவில்லை. அமித்ஷா என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கின்றார்.
ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமையும் என்கிறார். கூட்டணியை பொறுத்தவரை எங்களை போன்ற தெளிவு அவர்களிடம் இல்லை. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தரச்சான்று வழங்காதது குறித்த கேள்விக்கு, எனக்கு அந்த விவரம் சட்டரீதியாக தெரியவில்லை. அப்படி கொடுக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறு. இவ்வாறு அவர் கூறினார்.






