இலங்கை தமிழர்களுக்கு ராஜீவ்காந்தி பெற்று தந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரதமருக்கு, கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களுக்கு ராஜீவ்காந்தி பெற்று தந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழர்களுக்கு ராஜீவ்காந்தி பெற்று தந்த உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரதமருக்கு, கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
Published on

சென்னை,

சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது தமிழர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 1987-ம் ஆண்டு பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தபோது, அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 13-வது திருத்தத்தால் தமிழர்களுக்கு கணிசமான உரிமைகள் பெறப்பட்டன. இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு கவசம் 13-வது திருத்தம் தான். தமிழர்களுக்கு எதிரான கடுமையான போக்கு கொண்ட ராஜபக்சே, சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை அணி திரட்டுகிற முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார். இதனால், இலங்கை தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட முகாம்களில் ஏறத்தாழ 1 லட்சம் அகதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எதிர்காலம் குறித்து ஒரு செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் ராஜீவ்காந்தியின் முயற்சியால் 13-வது திருத்தத்தின் மூலம் பெற்ற உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பறிப்பதற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. தமிழர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அண்டை நாடான இந்தியாவிற்கு இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் தீவிரகவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com